1 - ஸ்வப்பனமல்ல தரிசனம்
என்னுடைய மிகச்சிறிய பிராயம். பாவாடை, சட்டை அணிந்து 3 அல்லது 4 வயதுதான் இருக்கும் எனக்கு அப்போது. தந்தை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு தோளில் தூக்கிச் செல்வார். அப்படி அடிக்கடி தாய், தந்தையுடன் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த காலகட்டத்தில் ஸ்வப்பனத்தில், 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியின் துவாரபாலகிகளில் அன்னையின் வலப்புறம் இருக்கும் நாயகி, பெரிய ஆஜானுபாகுவான தோற்றம் உடையவள், முன் மண்டபத்தில் இருப்பவள், பிரதஷிணம் வரும் சமயம், என் பாவாடையை பிடித்து இழுக்கிறாள்'. இந்த ஸ்வப்பனத்திற்கு பிறகு பல நாட்கள் ஆகியும் , அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு செல்லும் போதெல்லாம், என் கூட வரும் தாய், தந்தையை இறுகப்பிடித்துக் கொண்டு, பாவாடையைப் பிறர் பிடித்து இழுக்க முடியாதபடி சுருட்டிக் கொண்டு செல்வேன். ஆனால் பெற்றோரிடம் கூட அந்த ஸ்வப்பனத்தை பற்றி எதுவும் கூறியதில்லை. அதன்பின் பல வருடம் கழித்து, 10 வயதில் அம்பாள் சன்னதி அருகேயே குடியிருக்கும் பாக்கியம் கிட்டியது. எனக்கும் பயம் தெளிந்து சிநேகிதிகளுடன் நித்தம் கோயில் செல்வேன். இப்போதெல்லாம் அகிலாண்டேஸ்வரி சன்னதி செல்லும் போது அந்...